எமது இறை நம்பிக்கையின் வலுவான அடையாளம்தான் நம் பிரார்த்தனைகள். நாம் எமது தேவைகளை, தேட்டங்களை அல்லாஹ்விடத்தில் முன்வைக்கும் தருணங்கள் அவை… எமது மன்றாட்டங்கள், பச்சாதாபங்கள் ஏக இறையிடத்தில் எதிர்பார்ப்போடு முன்வைக்கப்படும் பொழுதுகள் அவை… அந்தப் பொழுதுகள் பெறுமானம் மிகுந்ததாய், வினைத்திறனும் விளைதிறனும் மிகுந்ததாய் ஆக்கிக் கொள்ள நாம் சில விடயங்களைக் கைக்கொள்வது சாலப்பொருத்தமானது:
  1. இஃக்லாஸ் – அல்லாஹ்வுக்கு மாத்திரமே என்ற அதிதூய எண்ணம். 
  2. தூதர்(ஸல்) அவர்களது வழியைத் துயர்ந்ததாக அமைதல்.
  3. அல்லாஹ் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் அவன் நம் வேண்டுதல்களுக்குப் பதிலளிப்பானென்ற உறுதியான மனோநிலையும் இருத்தல். நலவுகளினதும் பரக்கத்துக்களினதும் அனைத்துப் பொக்கிஷங்களும் அல்லாஹ்விடமே உள்ளன என்பதை ஒரு முஸ்லிம் அறிவதுதான் தனது இரட்சகன் மீதான அவனது ஆழ்ந்த நம்பிக்கையை அதிகரிப்பதாகும். 
  4. உள்ளத்தை அந்தப் பொழுதுகளுடன் சங்கமிக்கச் செய்தல்… ஆழ்ந்த இறையச்சம்… அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நன்மைகளின்பால் அதீத விருப்பம்… அவனிடமிருந்து வரக்கூடிய தண்டனைகளை விட்டும் அஞ்சிக்கொள்ளல். 
  5. இறுதியாக துஆவிலே உறுதியோடு மிகுந்த வினைமையுடன் (சீரியஸாக) ஈடுபடல்.